ரிசாட் பதியூதீன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைகள் இன்று
தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தாக்கல் செய்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
பதில் காவற்துறை மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட் 7 பேரின் பெயர்கள் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னார் பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து சென்றமை ஊடாக பொது சொத்துக்கள் முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 6 காவல்துறை குழுக்கள் அவரை தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்தநிலையில், 6 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் தெஹிவளை - எபனேசர் வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேநேரம், ரிஷாட் பதியுதீன் தலைமறைவாவதற்கு உதவிகளை வழங்கிய கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.