உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடு முழுவதிலும் தற்போது நடைபெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை covid-19 தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது உயர்தர பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும்.

அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15 ஆயிரம் வீதம் இந்த நிதி உதவி வழங்கப்படும்.

இந்த நிதி உதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இந்த நிதி சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முகக்கவசம், பாதுகாப்பு ஆடை அணிகள் மற்றும் கிருமி நாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகள் மேலதிகமாக என்ற ரீதியில் ஆகும்.

இதேபோன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகள் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.