
வவுனியாவில் தாக்குதலுக்கு இலக்கான மற்றொருவரும் மரணம்!
வவுனியாவில் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெட்டுச்சம்பவத்தில் இரண்டுபேர் மரணமடைந்திருந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததுடன் கடந்த இரண்டு நாட்களாக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் முல்லைத்தீவு கரிப்பட்ட முறிப்பு பகுதியைசேர்ந்த சுப்பிரமணியம் சிவாகரன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான கோபால் குகதாசன் (40)மற்றும் முல்லைத்தீவு கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன்(34) ஆகிய இருவர் ஏற்கனவே மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் நபர் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.