இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 லட்சத்தை கடந்தது- 85 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 57.44 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 67,57,132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 986 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 82203 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் அதிகம்.

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,07,883 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.55 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 85.02 சதவீதமாகவும் உள்ளது.