இந்தியாவுக்கே முதலிடம்: ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருத்து
மூலோபாய பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்ற அணுகுமுறை பின்பற்றப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெளிவாக தெரிவித்துள்ளார் என புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு குறித்த கரிசனைக்குரிய நாடாகயிருக்க முடியாது என்பதே அர்த்தம்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் தேசிய பாதுகாப்பே முதலாவதாக காணப்படுகின்றது,
ஆனால் பொருளாதார விவகாரத்தில் இலங்கைக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரும் எவரையும் நாங்கள் வரவேற்க தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார், கடன்களுக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை நடுநிலைமையோடு இருக்கவே விரும்புகின்றது அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணவே எங்கள் ஜனாதிபதி விரும்புகின்றார்.
துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் போன்ற தேசிய மூலோபாய சொத்துக்களின் முழுமையான கட்டுப்பாட்டினை எந்த வெளிநாட்டுக்கும் வழங்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.