யாழில் திரையரங்கில் பணியாற்றும் எழுவர் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா

யாழில் திரையரங்கில் பணியாற்றும் எழுவர் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றுபவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 309 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது

அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்புடையவர்.

மற்றொருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவர். அவர் காத்தான்குடியிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 451 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஏனைய இருவர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் குழந்தையை பிரசவித்த தாயார்" என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.