தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று – கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆய்வு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று – கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆய்வு

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உட்பட, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இந்த கூட்டம் இன்று காலை 11:00 மணிக்கு தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசானி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதன்போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசானி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, அவசர சட்டம் கொண்டு வருவது, கல்லுாரி செமஸ்டர் தேர்வு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், ஜூன் 30 வரை, ஊரடங்கு அமுலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்திற்காக, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்துச் செல்கிறது.

சென்னையில் நோய் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இதுவரை பலனளிக்கவில்லை. எனவே நோய் பரவலைத் தடுக்க, சென்னையில் முழு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் இதனை அரசு ஏற்கவில்லை. அத்தோடு முழு ஊரடங்கு என, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.