அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு தடை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு தடை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

திலீபனின் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குத் தடை கோரி வல்வெட்டித்துறை பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.