இலங்கையில் கொரோனா அபாயம் நீங்கவில்லை! மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள விசேட வைத்திய நிபுணர்

இலங்கையில் கொரோனா அபாயம் நீங்கவில்லை! மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள விசேட வைத்திய நிபுணர்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.

எனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.