ஐபிஎல் 2020: காயம் அடைந்த வீரர்களும், பாதிப்புக்குள்ளாகும் அணிகளும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெயின் பிராவோ, அம்பதி ராயுடு ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (19-ந்தேதி) தொடங்கியது. இதுவரை ஐந்து போட்டிகள்தான் நடைபெற்றுள்ளன. இதற்குள் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் அணிகள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ்-க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதிலேயே வெளியேறிய அவர், காயம் தீவிரம் அடைய தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ மூட்டில் ஏற்பட்ட காயத்தால் இன்னும் களம் இறங்க முடியாமல் உள்ளார். அம்பதி ராயுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. நாளை நடைபெற இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பயிற்சியின்போது காயத்தால் அவதிப்பட்டுள்ளார். இதனால் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. 2-வது ஆட்டத்திலும் விளையடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் முதல் போட்டியின்போது காயம் அடைந்தார். ஆனால் சிறு காயம் என்பதால் உடனடியாக உடற்தகுதி பெற்றுவிட்டார்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. இன்று சில போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.