
தேர்தலில் வென்றதும்...... முதல் கையெழுத்து இதற்கு தான் - கமலா ஹாரிஸ் சூளுரை
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே எமது முதல் கையெழுத்து அமையுமென துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை நிறுத்துவதாக ஜோ பிடன் கூறியபோது எனக்கு என்னுடைய தாய் தான் நினைவுக்கு வந்தார்.
நான் இந்நிலைக்கு உயர்ந்துள்ளதை அவர் மேலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
எங்களுடைய முதல் கையெழுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே இருக்கும்.
இதேவேளை பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணைவது மிக முக்கியமான திட்டமாகும்.
நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவை புதுப்பித்தல் மற்றொரு முக்கியமான பணி.
போதிய ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக தவிக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எங்களுடைய நிர்வாகம் கருணையுடன் பரிசீலிக்கும்.
இனவெறி தாக்குதலை தடுப்பதற்கான மசோதா நிச்சயம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.