அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில்  இதுவரை 5 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 5,50,000 குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அக்கடமியின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

ஓகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை மட்டுமே 72,993 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு வாரங்களில் குழந்தைகளின் கொரோனா பாதிப்பு 15% அதிகரித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 729 என்ற கணக்கில் தற்போது தொற்று பரவல் உள்ளது.

மொத்தமாக கொரோனா சிகிச்சை பெறுவோரில் 0.6 முதல் 3.6% வரை குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 0-0.3% வரை உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 66,03,509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 195,727 பேர் உயிரிழந்துள்ளனர்.