
பிரித்தானியாவில் மனைவி, கொழும்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டவர் யார்? பல தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இன்று காலை உயிரிழந்து கிடந்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை சுதந்திர சதுக்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் முதலில் இந்த சடலத்தை அவதானித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரஜிவ் பிரகாஷ் ஜயவீர என்ற 64 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. அவர் பம்பலப்பிட்டி பொலிஸ் பூங்கா வீதி மாவத்தையில் வசித்து வந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தகவல் திரட்டப்பட்டுள்ளன. இவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று பிரிவு அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் தனது சகோதரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் நேற்று இரவு எஸ்.எம்.எஸ் ஊடாக இந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார். தனக்கு உள்ள நோய் காரணமாக தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நபர் நேற்று மாலை 6.46 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன்னர் தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணிடம் தனது மோட்டார் வாகனத்தின் சாவியை கொடுத்துள்ளார். அதனை தனது சகோதரனிடம் வழங்கிவிடுமாறு கூறியுள்ளார்.
திருமணமான இவரது மனைவி தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாகவும், அவர் தனது வீடு அமைந்துள்ள பகுதியில் விமான அனுமதி பத்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அதனையும் மூடி சாவியை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரிடம் வழங்குமாறு பணிப்பெண்ணிடம் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற, நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டு பணிப்பெண் மற்றும் சகோதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.