
பசுவதை தடை சட்டம்! மஹிந்தவை பாராட்டிய உலக சைவ திருச்சபையின் தலைவர்
பசுவதை தடை சட்டம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள நடவடிக்கையை பாராட்டுவதுடன் முழுமையாக வரவேற்பதாக உலக சைவ திருச்சபையின் தலைவரும் கனடா பெரிய சிவன் ஆலயத்தின தலைவருமான அடியார் விபுலாநந்தா அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
உலக சைவ திருச்சபை கடந்த பல வருடங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் சிவ வழிபாட்டை மேம்படுத்துவதற்கும் பௌத்த சைவ ஒருங்கிணைப்பிற்காகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடந்த அரசாங்கத்தின் சபாநாயகராக இருந்த கரு ஜயசூரியவை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் சந்தித்து பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது உலக சைவ திருச்சபையின் சார்பில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தோம்.
இதன்போது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனும் என்னோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
அன்று நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு இன்று நல்ல ஒரு பதில் கிடைத்திருக்கின்றது.இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த பசுவதை என்பது இன்று பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.தேவை இருப்பின் அதனை இறக்குமதி செய்வது தடையல்ல.
இந்த நாட்டில் பௌத்தத்தையும் சைவத்தையும் வழிபடுகின்றவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அந்த வகையில் இந்த இரண்டு மதங்களிலும் பசுவதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது.
அதனை நடைமுறைபடுத்த பிரதமர் எடுத்திருக்கின்ற நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம்.
மேலும் தேவைக்கேற்ப அதனை இறக்குமதி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை.ஏனெனில் ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் தடையின்றி இருக்க வேண்டும்.
அதற்கு பிரதமர் இறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளமை வரவேற்புக்குரியது.
எனவே இந்த சட்டம் மிக விரைவில் சட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதனை நடைமுறைபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் உலக சைவ திருச்சபையின் தலைவர் அடியார் விபுலாநந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.