பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான செய்தி

பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான செய்தி

இன்று முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வருகை வழமைப் போல காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா முன்னதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் கனிஷ்ட பிரிவுகளுக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை, கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்தில் உள்ள வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை கல்லூரி அதிபரின் காரியாலயத்துக்கு முன்பாக கூடியபோது இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஆட்சியில் அமைத்து கொடுக்கப்பட்ட புதிய கட்டடத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டும், அது திறக்கப்படாமலேயே இருப்பது குறித்தும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.