அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற நடவடிக்கையால் சிக்கலில் தள்ளப்பட்டுள்ள நாடு!
ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு நடவடிக்கை காரணமாக வெளிநாட்டு கடன்களை உரிய வேளையில் திருப்பிச்செலுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய பின்னடைவைச் சந்திக்கும் நிலையேற்பட்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக்குறைப்புக்களும் அரச வரிவருமானத்தை வீழ்ச்சியடையச் செய்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வெளிநாடுகளிடம் இருந்தும் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்தும் ஸ்ரீலங்கா பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்குப் போதுமான நிதி அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் வருமானம், கடன்களுக்கான வட்டியை மீளச்செலுத்துவதற்கே போதுமானதாக இருக்காது என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக ஸ்ரீலங்காவின் வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்கம் பெற்ற கடன்களை உரிய திகதிக்குள் முழுமையாக மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமைந்ததுடன், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.