
அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா: ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா, அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரை தவறவிடுகிறார். இந்த நேரத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் தனது சர்வதேச ஓய்வை அறிவித்த 33 வயதான சுரேஷ் ரெய்னா, கடந்த ஒகஸ்ட் 21ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் டுபாய் சென்றார்.
நேற்று 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னணியில், தற்போது ரெய்னாவும் நாடு திரும்பியுள்ளார். மூன்று முறை ஐ.பி.எல். சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு இது பேரிழப்பாகும்.
அணியின் முன்னணி ஓட்டக்குவிப்பாளரான சுரேஷ் ரெய்னா, 164 போட்டிகளில் விளையாடி 4,527 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.