இந்தியாவில் ஒரேநாளில் அதிகபட்ச மரணங்கள்: மொத்த உயிரிழப்பு 8000ஐ தாண்டியது!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 357 பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அத்துடன், மொத்த பாதிப்பு 2.86 இலட்சமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 357 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 29 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 5 ஆயிரத்து 823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 ஆயிரத்து 841 பேருக்கும், டெல்லியில் 32 ஆயிரத்து 810 பேருக்கும், குஜராத்தில் 21 ஆயிரத்து 521 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.