
வேட்பாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதார பிரிவு வழங்கும் விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ,பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலார்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்கண்ணடவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார பிரிவு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த விதி முறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கும் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் பொலிஸார் அவதானமாக இருப்பதுடன் சுகாதார பிரிவினரின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் தயாராக இருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.