பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதற்கமைய இன்று (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்த வண்ணம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு 54198 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நாளை நடைபெறவுள்ள 9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையிலேயே நாளைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.