கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் உத்தரபிரதேச அமைச்சரவை அமைச்சருமான சேதன் சவுகான் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச அமைச்சரவையில் உள்துறை காவலர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்த இவர் இந்தியாவின் ஆரம்பகால கிரிக்கெட்டில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

74 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை 12 ஆம் திகதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பி.ஜி.ஐ. வைத்தியசாலையில் கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிறுநீரக தொடர்பான வியாதிகளால் அவரது உடல்நிலை மோசமடைந்து, அவர் குர்கானில் உள்ள மெதந்தா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

வெள்ளிக்கிழமை இரவு, அவரது உறுப்புகள் பல செயலிழக்கத் தொடங்கின பின்னர் செயற்கை சுவாச கருவி மூலம் அவருக்கு சிக்ச்சை அளிக்கப்பட்டது.

இந் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் சவுகானுக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது, அதன்பிறகு வைத்தியர்கள் அவரின் உயிர்ப்பிக்க முயன்றனர், எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சேத்தன் சவுகான், அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வேறுபடுத்தி கொண்டார். உ.பி.யில் பா.ஜ.வை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையாற்றுவதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.