எந்த முடிவும் இன்றி முடிவடைந்த தேர்தல்!
கொழும்பு அங்கிலிக்கன் திருச்சபையின் புதிய ஆயரை தெரிவுசெய்யும் தேர்தல் முடிவுகள் இன்றி நிறைவடைந்துள்ளது.
நேற்று இரவு வரை தேர்தல் இடம்பெற்றுள்ளபோதும் தெரிவு இடம்பெறவில்லை. இதனையடுத்து ஆயரை தெரிவுசெய்யும் பொறுப்பு பிரித்தானியாவை தளமாகக்கொண்ட அங்கிலிக்கன் சமூக தலைமையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தேர்தல் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. காலையில் ஆரம்பமான தேர்தல் நள்ளிரவு வரை நீடித்தது.
வணக்கத்துக்குரிய பெரி புரொஹெய்ர், துஷாந்த ரொட்ரிக்கோ மற்றும் மார்க் பில்மோரியா ஆகியோருக்கிடையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.
முதல் சுற்றின் இறுதியில் வணக்கத்துக்குரிய பெரி புரோஹெய்ர் மற்றும் துஷாந்த ரொட்ரிக்கோ ஆகியார் அதிக வாக்குகளை பெற்றனர்.
எனினும் இரண்டாம் மூன்றாம் வாக்கெடுப்புக்களில் இவர்கள் இருவருக்கும் இடையில் நடத்தப்பட்ட தேர்தலில் முடிவுகள் பெறப்படவில்லை.
இதனையடுத்தே ஆயரை தெரிவுசெய்யும் முடிவு பிரித்தானிய தலைமையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.