முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு

முதலை தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் மீட்பு

பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றபோது முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போயிருந்தவர் என பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் ஹொரணை, கனன்வில பகுதியைச் சேர்ந்த மதுர ஜினேந்திர எனும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி தாமரை மலர்களைப் பறிப்பதற்காக பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள உப கால்வாயில் இறங்கியுள்ளதாகவும், அங்கு அவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். 

இது தொடர்பில் பிரதேசமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய மீட்பு பணிகள் இடம்பெற்ற போதிலும், அது பலனளிக்கவில்லை. 

இன்று (29) நண்பகல் அந்நபரின் சடலம் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயில் மிதந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

சடலத்தின் தலைப்பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் முதலைத் தாக்குதலுக்கு இலக்கானதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவ இடத்திலான விசாரணைகளை நுகேகொட குற்ற புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.