அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. 

​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். 

​ ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் நீரிணையை "உடனடியாக, முழுமையாகவும் முற்றாகவும் மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதற்கும் வழிவகுக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய அவகாசம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

​ தெஹ்ரான் விரைவாக ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

​ இந்நிலையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்தார். 

​ எனினும், அது எங்கு நடைபெறும் அல்லது யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. 

​ ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா என வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். 

​ அதற்குப் பதிலாக, நான் ஓர் உடன்பாட்டை எட்டவே விரும்புகின்றேன். நான் மனிதர்களைக் கொல்ல விரும்பவில்லை, ஏனெனில் ஏராளமானோர் இறக்கிறார்கள், அதை நாங்கள் விரும்பவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.