மணலுக்குள் மர்மப் பொருள் ; ஆழியவளையில் பரபரப்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இனந்தெரியாத மர்ம பொருளொன்று கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழியவளை கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியில், மணலுக்குள் ஓரளவு புதைந்த நிலையில் இந்த மர்ம பொருள் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ள பாதுகாப்பு தரப்பினர், முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். குறித்த பொருள் எவ்வகையை சார்ந்தது என்பதனை இதுவரை உறுதியாக இனம் காண முடியவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். வெடிபொருள் செயலிழக்க செய்யும் நிபுணர்களின் ஆய்வுக்கு பின்னரே, அது குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூ. லின்ரன்