நவீன உலகிற்கு ஏற்றவாறு நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி நாமலிடமே உள்ளது! சாகர புகழாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதே கட்சியின் இறுதி இலக்கு என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மற்றும் நவீன உலகிற்கு ஏற்றவாறு நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி நாமல் ராஜபக்ஷவிடமே உள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவராக அவர் இருப்பார் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மாற்று அரசியல் சக்திகளின் போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்ட சாகர காரியவசம், கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் காரணமாகவே மக்கள் திசைதிருப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக ஜே.வி.பி போன்ற கட்சிகள் மக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்கி நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளியதாக அவர் சாடினார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான விமர்சனங்களை நிராகரித்த அவர், தேசத்தைப் பாதுகாத்த ஒரு தலைவருக்கு வழங்க வேண்டிய கௌரவத்தை வழங்குவதை விடுத்து, அரசியல் லாபத்திற்காக அவரைச் சீண்டுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கள புத்தாண்டு போன்ற தேசிய மரபுகளைக் கொண்டாடுவதைக் கூட சிலர் அரசியல் ரீதியாக விமர்சிப்பது நாட்டின் கலாச்சாரச் சீரழிவையே காட்டுவதாகவும், இவ்வாறான சவால்களைத் தாண்டி ராஜபக்ஷக்களின் தலைமையில் மீண்டுமொரு பலமான ஆட்சியை உருவாக்குவதே தமது இலக்கு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.