அஸ்வெசும அதிகரிப்பு: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

அஸ்வெசும அதிகரிப்பு: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் மற்றும் உர மானியங்களில் விசேட அதிகரிப்புகளை சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், இன்று (07) விசேட பொதியை அறிவித்த ஜனாதிபதி

ஏப்ரல் மாதத்திற்காக மட்டும் அஸ்வெசும பயனாளர்களின் உதவித்தொகை பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:

இதுவரை 17,500 ரூபாயாக இருந்த உதவித்தொகை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

10,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானிய அதிகரிப்பு:

சிறுபோகப் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியங்களிலும் பின்வரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

சிறுபோகப் பயிர்ச்செய்கை: ஒரு ஹெக்டேருக்கான உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பயிர்கள்: ஹெக்டேருக்கு இதுவரை வழங்கப்பட்ட 15,000 ரூபாய் மானியம், இனி 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

தேயிலைச் செய்கை: தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படும் உரச் சலுகை 9,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உடனடி நிவாரணங்கள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலதிக விபரங்களுக்கு

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்தத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, எமது நாட்டிலும் பல சவால்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம், எமது நாட்டில் ஏனைய பல பொருட்களின் விலைகளிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

இதனைச் சமாளிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, எரிபொருள் கொள்வனவுச் செலவினத்திற்கு ஏற்ப சந்தைக்கு விநியோகிப்பது. இரண்டாவது, செலவினத்தை ஒப்பிடாமல் மானிய அடிப்படையில் விநியோகிப்பது. முதலாவது முறையைப் பின்பற்றினால் வர்த்தகர்கள், கைத்தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நாங்கள் இதனைத் தாக்கமற்ற நிலையில் கையாள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டோம்.

சந்தை நிலவரப்படி பார்த்தால், ஒரு லீற்றர் டீசலை 600 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்ய நேரிடும். அந்த 600 ரூபாவிற்குள் 50 ரூபா கலால் வரியும் (Excise Duty) அடங்கியுள்ளது. அந்த வரியை நீக்குமாறு சிலர் யோசனை முன்வைக்கின்றனர். எனினும், நாங்கள் என்ன சிந்தித்தோம் என்றால், விற்பனை செய்யப்படுகின்ற ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபாயைத் திறைசேரியிலிருந்து ஒதுக்குவதற்குத் தீர்மானித்தோம். அதன்படி, டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாய் நிவாரணமும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் நிவாரணமும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம் ஒன்றுக்கு 2,000 கோடி (20 பில்லியன்) ரூபாய் வீதம், மூன்று மாதங்களுக்கு 6,000 கோடி ரூபாயை ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

மேலும், தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்காக எரிபொருள் வழங்கத் தீர்மானித்தோம். அதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதால், பொதுவாக ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் 100 ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. எரிபொருளைப் பிரதானமாகக் கொண்டு தொழில் செய்யும் மீனவ சமூகத்தினருக்கு மேலதிக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண இயந்திரப் படகுகளுக்கு (பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய் எதுவாக இருந்தாலும்) லீற்றருக்கு மேலதிகமாக 50 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். ஒரு படகிற்கு நாளொன்றுக்கு 25 லீற்றர் வீதம், 25 நாட்களுக்குரிய 625 லீற்றருக்கான தொகை (31,250 ரூபாய்) நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். இது மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். அடுத்ததாக, பல நாள் படகுகளுக்கு (Multi-day boats) ஒரு தடவைக்கு 150,000 ரூபாய் வீதம் எரிபொருள் நிவாரணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக யூரியா உரம் குறித்துப் பார்த்தால், விவசாயத் திணைக்களத்திடம் 14,000 மெற்றிக் டொன் பழைய விலையிலான உரம் கையிருப்பில் உள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களிடமிருந்த உர இருப்பில் 65 சதவீதத்தைப் பழைய விலையிலேயே விவசாயத் திணைக்களத்திடம் ஒப்படைக்க இணங்கியுள்ளன. அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எனினும், புதிதாக இறக்குமதி செய்யப்படும் உரத்தின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு மூடை உரத்தை 13,000 ரூபாவிற்கும் அதிக விலைக்கே நாம் பெறுகின்றோம். ஆனாலும், விவசாயிகளுக்கு அதனை 10,200 ரூபாவிற்கே வழங்கத் தீர்மானித்துள்ளோம். இதற்காக ஒரு மூடைக்கு 3,000 ரூபாயை அரசாங்கம் ஏற்கும். இதற்காக 1.7 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது.

நெற்பயிற்செய்கையாளர்களுக்கு யூரியா உரம் நிலையான விலையில் கிடைப்பதுடன், ஏனைய நிவாரணங்களும் அவர்கள் பயிரிடும் அளவைப் பொறுத்து வழங்கப்படும். அதன்படி, 25,000 ரூபாய் நிவாரணத்தை 30,000 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம். தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மூடை ஒன்றுக்கு வழங்கப்படும் 4,000 ரூபாய் கொடுப்பனவை, ஒரு தடவைக்கு மாத்திரம் 5,000 ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் 'அஸ்வெசும' பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் ஏப்ரல் மாதத்திற்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி:

  • 17,500 ரூபாய் பெறுபவர்களுக்கு 25,000 ரூபாயாகவும்,

  • 10,000 ரூபாய் பெறுபவர்களுக்கு 15,000 ரூபாயாகவும்,

  • 5,000 ரூபாய் பெறுபவர்களுக்கு 7,500 ரூபாயாகவும் (2,500 ரூபாய் அதிகரிப்பு) வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 8,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணம் குறித்துப் பார்க்கையில், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தமையால் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் தரக்குறைவான நிலக்கரி பயன்பாட்டினால் மின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளமை போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணங்களாகும். மேலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற தரக்குறைபாட்டிற்கு ஊழல் காரணமல்ல, அதனை அனுமதித்த குழுவினரே பொறுப்புக் கூற வேண்டும். இதற்காக அந்த நிறுவனத்திடமிருந்தே இழப்பீடு பெறப்படுமே தவிர, அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த மாட்டோம். மின் கட்டண அதிகரிப்பைச் சமாளிக்க மூன்று வழிகளைக் கையாண்டுள்ளோம். ஒரு பகுதியை மின்சார சபையும், ஒரு பகுதியை அரசாங்கமும், ஒரு பகுதியை மக்களும் ஏற்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 90 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துவோருக்கு மாதம் 500 கோடி ரூபாய் வீதம், மூன்று மாதங்களுக்கு 1,500 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 32 பில்லியன் ரூபாய் இழப்பில், 15 பில்லியனை அரசாங்கமும், 7 பில்லியனை நிலக்கரி நிறுவனமும் ஏற்கும். பொதுமக்கள் 10 சதவீதத்தை (மூன்றில் ஒரு பங்கு) மாத்திரமே ஏற்க வேண்டியிருக்கும்.

தற்போதைய சூழலில் எரிபொருள் விலை அதிகரித்தால், ஏப்ரல் முதல் டிசம்பர் வரை எரிபொருள் இறக்குமதிக்கு மேலதிகமாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க வேண்டியிருக்கும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதாரத்தைச் சமாளிப்பது கடினம். எனவே, இந்த ஒட்டுமொத்த நிவாரணப் பொதிக்காக அரசாங்கம் 10,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.