காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்

காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்

இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நியமனக் கடிதததை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும் காமினி செனரத் கடமையாற்றினார்.

இதன்பின்னர் கடந்த ஆண்டு 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான காமினி செனரத் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத்தில் பட்டப்பின்படிப்பு பட்டத்தை பெற்றுள்ள அவர், பல்வேறு வெளிநாட்டு கற்கை நெறிகளையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.