உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை

உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேலாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அந்நாட்டு எண்ணெய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் இந்த போக்குவரத்து நெருக்கடியால், ஈராக் ஏற்கனவே தனது உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளது.

உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை | Crisis Iraq Decides To Reduce Its Oil Production

இதன்படி, நேற்றைய (03) நிலவரப்படி, ருமைலா (Rumaila) எண்ணெய் வயலில் நாளொன்றுக்கு 700,000 பீப்பாய்களும், மேற்கு குர்னா 2 (West Qurna 2) வயலில் 460,000 பீப்பாய்களும் குறைக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடைகளால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈராக்கின் தெற்கு துறைமுகங்களில் எண்ணெய் சேமிப்பு அளவானது மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஹார்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களை "தீயிட்டு கொளுத்தப்போவதாக ஈரான் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

இந்தநிலையில் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படைஇ கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.