கடும் சரிவில் ஆசிய பங்குச்சந்தைகள்; டொலர் பெறுமதி திடீர் உயர்வு; கொழும்பு பங்குச்சந்தை நிறுத்தம்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ள தன் காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 3) சரிவைச் சந்தித்துள்ளன.
இதே வேளை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி டொலரை நோக்கித் திரும்பியதால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ளது.

ஜப்பானின் நிக்கேய் (Nikkei) பங்குச் சந்தை ஆரம்பத்திலேயே 327.44 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,729.80 புள்ளிகளாகப் பதிவானது. தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) குறியீடு 78.98 புள்ளிகள் (1.26%) குறைந்து 6,165.15 புள்ளிகளாகத் தொடங்கியது.
தைவானின் தைவான் பங்குச் சந்தையும் சரிவுடன் ஆரம்பமானது. உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான TSMC பங்குகள் ஆரம்பத்தில் 5% உயர்ந்த போதிலும், பின்னர் சரிவைச் சந்தித்தன.
ஏனைய சந்தைகளுக்கு மாறாக, ஹொங்கொங்கின் ஹாங் செங் (Hang Seng) குறியீடு 130.39 புள்ளிகள் உயர்ந்து 26,190.24 ஆக ஆரம்பமானது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் விலைகள் உயரும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதே பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண்களும் 5 சதவீதத்தை விட அதிகமான அளவு சரிவு ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதன்படி, தற்காலிக சந்தை நிறுத்தத்தைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வழக்கமான வர்த்தகம் மீண்டும் முற்பகல் 10.00க்கு ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.