அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!
அரசாங்கம்,மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, தனது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
23,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தச் சங்கம், சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
2025 டிசம்பரில் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை. மருத்துவமனைகளில் நிலவும் மனிதவளத் தட்டுப்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின்மை மற்றும் உபகரணப் பற்றாக்குறை.

வேதனப் பிரச்சினைகள் மற்றும் கொடுப்பனவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டமை என்பவற்றை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெப்ரவரி 18 முதல், சுகாதார மருத்துவ அதிகாரிகள் பல்வேறு பொதுச் சுகாதாரத் தரவுகள் மற்றும் அறிக்கைகளை அமைச்சுக்கு சமர்ப்பிப்பதிலிருந்து விலகவுள்ளனர்.
இதில், டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் குறித்த தினசரி மற்றும் வாராந்த அறிக்கைகள். நோய் எதிர்ப்புத் தடுப்பூசி (Immunization) தரவுகள். தாய்-சேய் ஆரோக்கியம் மற்றும் பாடசாலை சுகாதார அறிக்கைகள் என்பன அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.