காப்பாற்றக் கூடிய பல நோயாளர்கள் பரிதாபமாக மரணிக்கும் அவலநிலை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காப்பாற்றப்படக்கூடிய நோயாளிகளில் சுமார் முப்பது சதவீதம் (30%) பேர் அனாவசியமாக மரணித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான இமேஜ் கைடட் ரேடியேஷன் தெரபி (Image Guided radiation Therapy) உபகரணங்கள் இல்லாததால் பலர் பரிதாப மரணங்களை தழுவுவதாக நேற்று (07.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு முதல் இந்த குறையை நிவர்த்திக்க முயற்சி எடுப்பதோடு ஏற்கனவே இருக்கும் ஒன்பது உபகரணங்களுக்கு மேலதிகமாக எட்டு உபகரணங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மகிலால் விஜேகோன் கூறினார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால், அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1200 நோயாளிகள் ஒவ்வொரு ஆண்டும் கண்டறியப்படுவதாகவும், ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறாதது ஒரு கடுமையான பிரச்சினையாக தோன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.