எம்.பிக்களுக்கு சிக்கல் : ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

எம்.பிக்களுக்கு சிக்கல் : ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘நாடாளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் (Harshana Nanayakkara) இந்தச் சட்டமூலம் இன்று (07) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கான ஓய்வூதிய உரிமைகளை இரத்து செய்ய இந்த சட்டமூலம் முயல்கிறது.

முன்னதாக, நாடாளுமன்ற ஓய்வூதிய (இரத்து செய்தல்) வரைவு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் பரிசீலித்து ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எம்.பிக்களுக்கு சிக்கல் : ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு | Bill To Suspend Pension For Members Of Parliament

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்கும் சட்டமூலம் , சட்டமா அதிபரிடமிருந்தும் அனுமதியைப் பெற்றதுடன் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜூன் 16, 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 1971 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.