கொரோனா வைரஸ் : அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலேயே அதிக நோயாளர்கள் பதிவு!

கொரோனா வைரஸ் : அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலேயே அதிக நோயாளர்கள் பதிவு!

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளதாக பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளதாக இந்துஸ்தான் புள்ளிவிபர பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

இதன்படி  “அமெரிக்காவில் 16, 923 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ள அதேவேளை  இந்தியாவில் 8, 944 பேர் உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று மத்திய சுகாதார அமைச்சகம் முன்பு கூறியிருந்தது.

இவர்களில் 2.25 சதவீதம் பேர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1.91 சதவீதமானோருக்கு   ஆக்சிஜன் ஆதரவு தேவை. சிலருக்கு மட்டுமே வென்டிலேட்டர் ஆதரவு தேவை என்றும் அமைச்சகம் கூறியது.

இந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மராட்டியம்,  டெல்லி,  மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தியாவில் திங்களன்று கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இது அதன் கொரோனா எண்ணிக்கையை 2.6 இலட்சமாக உயர்த்தியது.

நாட்டின் நிதி தலைநகரான மும்பை வைரஸ் வெடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரம் ஆகும்.  அதன் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர பகுப்பாய்வு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.