நான்காவது தடவையாக இலங்கையின் பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு

நான்காவது தடவையாக இலங்கையின் பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக  பதவியேற்க உள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் மத சம்பிரதாய அனுஷ்டானங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த பதவியேற்கவுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நான்காவது பிரதமராக தெரிவாகவுள்ள மஹிந்தவுக்கு ஏனைய நாடுகள் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையை 25 முதல் 28 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 வது திருத்த சட்டத்திற்கு ஏற்ப 30 அமைச்சர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய அமைச்சரவையை 25 முதல் 28 வரை மட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர் என பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டால் ஒரு அமைச்சருக்கு கீழ் பல அமைச்சரவை பதவிகள் வழங்க வாய்ப்புள்ளது.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சையும் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என அக்கட்சியின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.