உயிரோடு இருந்தவரை தூக்கி சவக்கிடங்கில் போட்ட மருத்துவமனை ஊழியர்கள்!
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்தியப் ஊடகங்கள் கூறியுள்ளதாவது,
ராஜு என்ற ஆதரவற்ற நபர், தனக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண மகபூபாபாத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவருக்கு துணையாக யாரும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சைக்காக அனுமதிக்காத சூழலில், இரண்டு நாட்கள் உணவு இல்லாமல் அங்கேயே காத்திருந்த அவர் மயக்கம் அடைந்துள்ளார். இந்த நிலையில், ராஜூ இறந்து விட்டதாக கருதிய மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் இறந்துவிட்டாரா?, உயிருடன் இருக்கிறாரா? என்று கூட வந்து பார்க்காத மருத்துவமனை அதிகாரிகள் அவரை தூக்கி மருத்துவமனை சவக்கிடங்கில் போட உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து, சவக்கிடங்கை சுத்தம் செய்த போது ராஜூவின் உடலில் அசைவுகள் இருப்பதை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் ராஜூவின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜூவுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுவதுன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.