வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் காட்டுக்குள் சடமாக மீட்பு; உறவுகள் அதிர்ச்சி
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.
மாயமான மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டார்.
இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.