தேசியப்பட்டியலில் இருந்து நான் விலகிவிட்டேன்! டில்ஷான்

தேசியப்பட்டியலில் இருந்து நான் விலகிவிட்டேன்! டில்ஷான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தேசியப்பட்டியில் இருந்து கடந்த மாதம் தொடக்கத்தில் விலகியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 17 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதில் டில்ஷானின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட டில்ஷான் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தேசிய பட்டியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு கடந்த மாதம் தொடக்கத்தில் கடிதம் அனுப்பியுள்ளேன்.

அந்த பதவி இன்னும் தகுதியான ஒருவரிடம் செல்ல வேண்டும் என்று நான் உணர்ந்தேன். நான் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டேன்.

எனவே இப்போது எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன். ஆகையினால் இந்த நேரத்தில் அரசியலில் நுழையாமல் இருப்பதே சிறந்த முடிவு என்று நான் நினைத்தேன்.

இதேவேளை, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரத்தில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

இந்நிலையில் ஜனாதிபதி நாட்டை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.