
குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்துக் கொன்ற தந்தை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றதாக போலீஸார் ஒருவர் தெரிவித்தார் தோண்டிராம் போசலே (45), பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இவரின் மகள் சாதனா(16) மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவரின் தந்தை போசலே கோபமடைந்துள்ளார்.
இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஆத்திரம் அடைந்த தந்தை அருகில் கிடந்த கிரைண்டர் கல்லில் பொறுத்தப்பட்டிருந்த கட்டையை உருவி மகள் என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளார்.
பலத்த காயமடைந்த 16 வயது மாணவி சாங்லியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் , சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பலத்த காயங்களால் அவர் இறந்ததாகத் தெரியவந்துள்ளதாக அட்பாடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் வினய் பாஹிர் தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், உயிரிழந்த மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.