
கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மனைவி, மகள் ; வாகனங்களுக்கு தீ வைப்பு
கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படும் மனைவியும் மகளும் பலாங்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மனைவியும் மகளும் இரத்தினபுரி பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் உள்ள தனது கணவரின் வீட்டிற்குச் சென்று கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனத்தின் மீது தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கணவன், பிரதேசவாசிகளின் உதவியுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ள நிலையில் கெப் வாகனத்திற்கு சிறிய சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணவனும் மனைவியும் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்கேத நபர்களான 43 வயதுடைய மனைவியும் 23 வயதுடைய மகளும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.