
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சுங்கம் விளக்கம்
விடுவிக்கப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில், தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மாத்திரமே அடங்கியிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (8) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
அதில், குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ காணப்படவில்லை எனத் தான் நம்புவதாக, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்பு, இறக்குமதி ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, கொள்கலனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.