
கொவிட் பரவல் காரணமாக எடுக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல்
நாட்டிற்குள் நுழைந்துள்ள புதிய கோவிட் திரிபு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் கோவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 24 பிராந்தியங்களில் கோவிட் பரவியுள்ளது. இந்நிலையில் இலங்கை சுகாதார பிரிவின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் நிலைமை தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் நோயாளிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் இன்று நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். நாட்டை முடக்குவதா கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.