
பல்கலைகழக பாலியல் வன்கொடுமை ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
இந்தியாவின் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குறித்த நபர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.
பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார்.
ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், 90,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது