
மகளை கடத்திய தந்தைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
வெலிகம, பொரலகம பகுதியைச் சேர்ந்த தனது திருமணமான மகளை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மார்ச் 25 ஆம் திகதி சம்பவம் பதிவாகியுள்ளதுடன், கடத்தப்பட்ட பெண் நேற்று (05) கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் கணவரை தந்தை ஏற்காததால், மகளை கடத்தி எல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணின் கணவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவரை அந்த பழக்கத்தை விட்டுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அதில் கவனம் செலுத்தாததால் தந்தை கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக குடும்பத்தின் மேலும் இரண்டு உறவினர்களும் கைது செய்யப்பட்டதாகவும் மாத்தறை நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.