விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அரசினால் கிடைக்கவுள்ள மானியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அரசினால் கிடைக்கவுள்ள மானியம்

தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணிகள் நாளை (30.03.2025) ஆரம்பமாகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தேங்காய் பயிர் செய்கைக்காக 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரத்தைத் தயாரிக்க அரச உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

இந்த உரத்தை மானிய விலையில் வழங்கவும் விநியோகிக்கவும் தேவையான பணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபையும் அரச உர நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தையில் ரூ.9000 விலைக்கு வாங்கப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையை ரூ.4000 நிவாரண விலையில் வழங்க இம்மாதம் 30 திகதியில் இருந்து வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஹந்தபனகல தென்னை தோட்ட நாற்றங்கால் வளாகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அரசினால் கிடைக்கவுள்ள மானியம் | Subsidy On Fertilizer Prices For Coconut Farmers

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால் வழங்கப்படுகின்ற இந்த உர மானியத்தைப் பெற, தென்னை விவசாயிகள் தென்னை பயிர்ச்செய்கை சபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https://coconutsrilanka.lk இல் இருந்து பெறலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.