யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர தொழிலுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் 'தொழிற் சந்தை 2025' 12 ஆம் திகதி கலைப்பீடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் உதவியுடனும் 'சேவ் லைவ்' அமைப்பின் அனுசரணையுடனும் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்பட்டது.

அறுபதிற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்ற இத்தொழிற்சந்தையில் அரச திணைக்களங்கள், சபைகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர். அரசாங்க தகவல்திணைக்களத்தின் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக ஊடகப்பிரிவினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

'தொழிற் சந்தை 2025'இன் தொடக்கவிழாவில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில், கலைப்பீடத்தில் நான்காம் வருடம் மற்றும் மூன்றாம் வருட சிறப்புக்கலை மற்றும் பொதுக்கலை பயிலும் மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலைப் பட்டங்கள் பெற்று, வேலைவாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளும் நேரடிப் பயனாளிகளாக இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.