வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய தேர்தல் நிலவரம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது
குறித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துவருவதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மலையகத்திலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்
அதேநேரம், நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரை தெரிவு செய்வதற்காக 22 தேர்தல் மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 3 ஆயிரத்து 652 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தி போட்டியிடுவதுடன் 3 ஆயிரத்து 800 பேர் சுயேட்சை குழுக்களின் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.