ஆசிரியை ஒருவர் அடித்துக் கொலை! அவரின் தாயாரும் சகோதரரும் கைது
கம்புருபிட்டிய பிரதேசத்தில் இளம் ஆசிரியை ஒருவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் தாயும் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தி மற்றும் இரும்புப் பூந்தொட்டியால் சரமாரியாகத் தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட பெண்ணின் தாயாரால் பொலிஸாருக்கு எழுதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவரது மகளை அவரே கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், பல வருடங்களாக மகள் சொத்துக் கேட்டு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் குற்றம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 31ஆம் திகதி 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சந்தேகத்தின் பேரில் தாயார் நாற்காலியில் மயங்கிக் கிடந்துள்ளார்.
மகளைக் கொலை செய்து விட்டு 76 வயதுடைய தாய், மருந்து வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தவறான முடிவெடுப்பதற்கு முயன்றார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.