பாடசாலை மாணவர்களுக்கான இலவச காலணி : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சுமார் ஏழு இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலைகளில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு சமமான வளங்களை பகிர்ந்தளித்தால் பாடசாலைகளுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்படாது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் நலன்புரித் திட்டங்களை விரிவுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 250 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.
கல்வி மறுசீரமைப்புக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன, நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி கொள்கைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பரீட்சை முறைமைக்கு பதிலாக மாணவர்களுக்கு இணக்கமானதாக அமையும் கல்வி முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.