
கடல் அலைகள் கரையை அண்மித்த நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் – மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேநேரமை் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்மித்த நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.